இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease (GERD)) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் ஒரு நீண்டகால நோயாகும், இதன்போது இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு இரப்பைச்சாறும் உணவுகளும் மேல்நோக்கித் தள்ளப்படுகின்றன, இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு பாதிப்புறுவதால் இந்த நோய் தீவிரமடைகிறது, இதனால் ஏற்படும் முக்கிய அறிகுறியாக நெஞ்செரிவு விளங்குகிறது.
இந்நோய் உடையவர்களுக்கு மேலும் ஒரு அமிலப் பின்னோட்டம் ஏற்படலாம்; உணவுக்குழாயில் இருந்து அமிலம் மேலும் மேற்செல்வதால் ஏற்படுகின்றது, இது மிடற்றுத்தொண்டைப் பின்னோட்டம் எனப்படும். இதனால் மூச்சு வழி தொடர்புடைய அறிகுறிகள் (இருமல், குரல் கரகரப்பு, ஆஸ்துமா) ஏற்படலாம்.
இரைப்பையும் உணவுக் குழாயும் (களம்) சந்திக்கும் இடத்தில் இயல்பான நிலையில் ஒரு இறுக்கி காணப்படுகிறது, இது கீழ்க்கள இறுக்கி (lower oesophageal sphincter) எனப்படும், இது இயல்பான நிலையில் இறுக்கமாகக் காணப்படுவதால் இரைப்பை-உணவுக்குழாய்ச் சந்தி மூடப்பட்டுக் காணப்படும்; உணவுக் குழாயில் இருந்து உணவு இரைப்பைக்குச் செல்லும்போது இறுக்கி தளர்வடைவதால் உணவு இரைப்பைக்குள் செல்லமுடிகின்றது. உணவு உட்கொண்ட பிற்பாடு மீண்டும் இரைப்பை-உணவுக்குழாய்ச் சந்தி மூடப்படுகின்றது, இச் செயற்பாட்டின் காரணமாக இரைப்பையில் சுரக்கப்படும் அமிலம் மேல்நோக்கிச் செல்வது தடுக்கப்படுகிறது. இரைப்பை – உணவுக்குழாய் இறுக்கி தளர்வடைந்து காணப்படும் சந்தர்ப்பத்தில் இரைப்பையில் உள்ள உணவு, இரைப்பைச்சாறு போன்ற அடக்கங்கள் இறுக்கியின் திறந்த வழியூடாக மேல்நோக்கிச் செல்லுகின்றன. இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு பாதிப்புறுவதால் உணவுக்குழாய் அழற்சி ஏற்படுகின்றது, இதன்போது நெஞ்செரிவு நோயாளியால் உணரப்படுகின்றது.
சிலவேளைகளில் அமிலம் தொண்டையில் பின்னோட்டம் அடைவதால் சுவாசத்தொகுதியில் பாதிப்பு ஏற்படும். இது மிடற்றுத்தொண்டைப் பின்னோட்டம் எனப்படும்.
இரைப்பை – உணவுக்குழாய் இறுக்கி தளர்வடைந்து காணப்படும் சந்தர்ப்பத்தில் இரைப்பையில் உள்ள உணவு, இரைப்பைச்சாறு போன்ற அடக்கங்கள் இறுக்கியின் திறந்த வழியூடாக மேல்நோக்கிச் செல்லுகின்றன. சில சந்தர்ப்பங்களில் இரைப்பையின் மேற்பாகம் நெஞ்சறைக்குள் பிதுங்குகின்றது, இது கையாட்டஸ் கேர்னியா எனப்படும். சிலவேளைகளில் அமிலம் தொண்டையில் பின்னோட்டம் அடைவதால் சுவாசத்தொகுதியில் பாதிப்பு ஏற்படும்.
உடல் பருமன் உடையவர்களில் இந்நோய் இலகுவாக வரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. சில மருந்துவகைகள் (கல்சியம் தடுப்பிகள், பீட்டாத் தடுப்பிகள்) போன்றன இரைப்பை – உணவுக்குழாய் இறுக்கியைத் தளர்வடையச் செய்யும் ஆற்றல் கொண்டவை. இவற்றின் தொடர்ச்சியான பயன்பாடும் இந்நோயை உருவாக்கலாம்.புகைப்பிடித்தல், மிதமிஞ்சிய மதுபானப் பயன்பாடும் இந்நோயை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன.[2]
சிகிச்சை வழங்காத நோய் தீயவிளைவுகளை உண்டாக்கும். உணவுக்குழாயின் மேலணி இழையங்கள் உருமாற்றத்துக்கு உட்படும்; இந்நிலை பரட்டின் உணவுக்குழாய்(Barrett’s esophagus) எனப்படும், இந்த நிலையைத் தொடர்ந்து, இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி ஏற்படும்; இறுதியில் உணவுக்குழாய்ப் புற்றுநோய் உண்டாகலாம்.
பொதுவான அறிகுறிகள்:
1. நெஞ்செரிவு;
2. பின்னோட்டம்: உணவு, இரைப்பைச்சாறு
3. உணவு விழுங்குவதில் சிக்கற்தன்மை
குறைவானஅறிகுறிகள்:
1. உணவு விழுங்கும்போது வலி;
2. அதிகம் உமிழ்நீர் சுரத்தல்;
3. குமட்டுதல்
4. நெஞ்சுவலி
5. இருமல்
இப் பின்னோட்ட நோய் சிலவேளைகளில் உணவுக்குழாய்க்கு காயத்தை ஏற்படுத்தும். அவையாவன:
பின்னோட்ட உணவுக்குழாய் அழற்சி – உணவுக்குழாய் மேலணி இழையங்கள் இறந்து, உணவுக்குழாயும் இரைப்பையும் சந்திக்கும் இடத்தில் புண் உண்டாகும்.
உணவுக்குழாய்ச் சுருக்கம் – அழற்சியின் காரணமாக உணவுக்குழாயில் சுருக்கம் ஏற்பட்டு தடை ஏற்படுதல்;
பரட்டின் உணவுக்குழாய் – குடல் உயிரணுக்கள் உருமாற்றம் பெறல். (இரைப்பையை அண்மித்த உணவுக்குழாய்ப் பகுதியில் செதின்மேலணிக் கலங்கள் கம்பமேலணிக் கலங்களாக உருமாற்றம் அடைதல்).[5]
உணவுக்குழாய்ப் புற்றுநோய் – மிகவும் அரிதான புற்றுநோய் வகை.[4]
பின்னோட்ட நோயில் உணவுக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளபோது வேறு அறிகுறிகளும் தென்படலாம்.
நீண்டகால இருமல்
குரல்வளை அழற்சி (மென்மையற்ற குரல், செருமுதல்)
மூச்சுத்தடை நோய்
பல் மிளிரி தேய்வடைதல்
பற்களில் கூச்சம் உண்டாதல்
காற்றுக்குடா அழற்சி
பாதிப்புற்ற பற்கள்[6]
தொண்டையழற்சி
சில நபருக்கு காற்றுக்குடா அழற்சி, அடிக்கடி காதில் தொற்று போன்றவை பின்னோட்ட நோயால் ஏற்படலாம், எனினும் இதன் சரியான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை.[4]
கைக்குழந்தைகள், சிறார்கள் தமது உணர்குறிகளைத் தெரிவிக்க முடியாமையால், அவர்களில் இந்நோயைக் கண்டறிவது சிக்கலாக உள்ளது, எனவே கவனமான அவதானிப்பு மிக முக்கியமானது. அடிக்கடி வாந்தி எடுத்தல், காரணமின்றி துப்புதல், இருமல், மூச்சிரைப்பு போன்றவை அவதானிக்கக்கூடிய அறிகுறிகளாகும். கைக்குழந்தைகளில் ஆற்ற முடியாத அழுகை, உணவு உட்கொள்ள மறுத்தல், உணவுக்காக அழுது பின்னர் உணவு ஊட்டுகையில் உணவை உட்கொள்ளாமல் மீண்டும் அழுதல், தேவையான உடல் எடை அடையாது இருத்தல், வாய்த் துர்நாற்றம், அடிக்கடி ஏப்பம் விடுதல் போன்றன பொதுவாக அவதானிக்கக்கூடிய அறிகுறிகள் ஆகும்.
நோயாளியின் தரவுகள் மிக முக்கியமானது, மேற்கொண்டு உணவுக்குழாய்-இரைப்பை-முன்சிறுகுடல் அகநோக்கி மூலம் உணவுக்குழாய் அவதானிக்கப்படுகின்றது. உணவுக்குழாயின் அமிலத்தன்மையை (pH) அளவிடும் முறை இன்றைய மருத்துவத்தில் இந்நோய்க்கான சிறந்த அறுதியிடல் முறை என நம்பப்படுகின்றது, இதைத் தவிர பேரியம் விழுங்கற்பின் எக்ஸ்-கதிர் அவதானிப்பும் அறுதியிடலில் ஒன்றாகும்.
சாதரணமாக உணவுக்குழாயில் அமிலத்தன்மை இருப்பது இல்லை, இரைப்பையின் உள்ளடக்கங்கள் மேல்நோக்கித் தள்ளப்படும்போது இரைப்பைச் சாற்றில் உள்ள ஐதரோக்குளோரிக் அமிலமும் உணவுக்குழாயுள் புகுவதனால் அங்கே அமில ஊடகம் உருவாகுகின்றது, எனவே உணவுக்குழாயின் அமிலத்தன்மையை (pH) அளவிடுதல் மூலம் இந்நோய் அறுதியிடப்படுகின்றது, மேலும் இம்முறை மூலம் சிகிச்சையின் விளைவுகள் சாதகமானதா என்பதும் அறியப்படுகின்றது. இந்நோய் உள்ள ஒரு நபருக்கு புரோட்டான் ஏற்றித் தடுப்பிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, நோயின் அறிகுறிகள் குறைந்தால் நோய் உள்ளதென்பதை அறுதியிடலாம்.
பொதுவாக, சிகிச்சையின் விளைவுகள் பயனளிக்காது போகும் பட்சத்தில் அல்லது உணவு விழுங்குதல் கடினம், இரத்தச்சோகை, மலத்தில் குருதி, மூச்சிரைத்தல், உடல் எடை குறைதல், குரல் மாறுதல் போன்ற வேறு புதிய அறிகுறிகள் தென்படும் சந்தர்ப்பங்களில் உணவுக்குழாய்-இரைப்பை-முன்சிறுகுடல் அகநோக்கி மூலம் உணவுக்குழாய் நோக்கப்படுகின்றது. இவ்வாறு நோக்கப்படும் சமயத்தில் உணவுக்குழாய் அழற்சியுற்றுள்ளதா என்பது கவனமாக அவதானிக்கப்படுகின்றது, வழமைக்கு மாறாகக் காட்சியளிக்கும் உணவுக்குழாயில் இருந்து நுணித்தாய்வுக்காக மிகச்சிறிய துண்டு எடுக்கப்படுகின்றது, இதன்மூலம் குறிப்பிட்ட நபருக்கு இழைய மாறுதல் ஏற்பட்டுள்ளதா என்பது அறியப்படும். நுணித்தாய்வு மூலம் பரட்டின் உணவுக்குழாய், புற்றுநோய் என்பன அறியப்படுகின்றன.
சிகிச்சை
சிகிச்சை வழங்குவதை மூன்று விதமாக வகுக்கலாம்: வாழ்வு முறையை மாற்றுதல், மருந்துகள், அறுவைச்சிகிச்சை
வாழ்வு முறை
உணவு, பழக்கவழக்கங்கள் மாற்றப்பாடல் தேவையானது. நோய் அறுதியிடப்பட்டவர்கள் சில எச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது நோயின் தீவிரம் அதிகமாகாமல் தடுக்கும். அவையாவன:
• 6 தொடக்கம் 8 அங்குலம் (15 – 20 செ.மீ) வரையிலாவது தலையும் உடம்பின் மேற்பாகமும் உயர இருக்குமாறு தலையணைகளைப் பயன்படுத்தித் துயில் கொள்ளுதல் (தலை மட்டும் உயர்த்திப் படுத்தல் உகந்தது அல்ல);
• படுக்கப்போக முன்னர் அதிகமாக உணவு உட்கொள்ளலைத் தவிர்த்தல்;
• உணவு அருந்தியபின்னர் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலத்தின் பின்னரே படுக்கைக்குச் செல்லுதல்;
• அமிலத்தன்மையான பழவகைகள் (எலுமிச்சை, தோடை) அல்லது பழச்சாறு, சொக்கலேட், கொழுப்பு உணவு, கார உணவு, காப்பி போன்றவற்றை இயலுமானவரையில் தவிர்த்தல்; உள்ளி, வெங்காயம், தக்காளி போன்றவையும் நோயைத் தீவிரமாக்கலாம்.
• வயிற்றை இறுக்கும் ஆடைகளை அணிவதைத் தவிர்த்தல்;
• மன அழுத்தத்தைக் குறைத்தல்;
மருந்து முறை
·புரோட்டான் ஏற்றித் தடுப்பிகள் (Proton pump inhibitors)
–ஒமிப்ராசோல்(omeprazole ), லன்சப்ராசோல்(lansoprazole)
·இரையக ஹிஸ்டமின் ஏற்பித் தடுப்பிகள் (Gastric H2 receptor blockers)
–ரனிற்றிடின்(ranitidine), பொமிற்றிடின்( famotidine)
·அமில எதிரி (antacids)
–ஜெலுசில்(Gelusil)
·சுக்ரால்பேட்(Sucralfate)
·இரையக இயக்கி (gastrokinetic): கீழ்க்கள இறுக்கியை வலுவாக்குவதிலும், விரைவில் இரைப்பையில் உள்ள உணவுகளை அகற்றுவதிலும் உதவுகின்றது.
–மக்சலோன்(Maxalon) அல்லது மெட்டோக்ளோப்ராமைட்(metoclopramide)
அறுவைச்சிகிச்சை
பரவலான முறை, நிசெனின் மேல் இரையகமடிப்பறுவைச் சிகிச்சை முறையாகும். மேல் இரையகத்தின் பகுதிகள் உணவுக்குழாயின் கீழ் இறுக்கிப் பகுதியின் மேலே மடிக்கப்பட்டுத் தைக்கப்படுகின்றது, இதன் மூலம் கீழ் உணவுக்குழாய் இறுக்கமடைந்து உணவு மற்றும் அமிலம் மேல் நோக்கித் தள்ளப்படுவதைத் தடுக்கின்றது. இம்முறை பெரும்பாலும் உதரநோக்கு அறுவைச்சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்நோய் வாழும் முறை மூலம் எளிதில் தடுக்கப்படக்கூடியது. மேலே, சிகிச்சையில் அறிவுறுத்தப்பட்ட வாழ்க்கை முறைகள் தடுப்பு முறைக்கும் பொருந்தக்கூடியது.
சிகிச்சை வழங்கப்படாத இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் தீய விளைவை உண்டாக்கும்; வேறு நோய்களையும் உடலுக்கு ஒவ்வாத சந்தர்ப்பங்களையும் உண்டாக்கும். இந்நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள்:
சிகிச்சைக்கும் வாழ்க்கை முறை மாற்றத்துக்கும் இந்நோய் கட்டுப்படாவிடின் உடனடியாக மருத்துவரை அணுகல் அத்தியாவசியமானது. பின்வரும் சந்தர்ப்பங்கள் ஏற்படினும் மருத்துவ ஆலோசனை தேவை.